கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (42). தோட்டத் தொழிலாளியான இவர், தனது 3 வயது மகன் முகிலனை கிரச்சு பால்வாடிக்கு இன்று (ஆக.21) அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மழை மற்றும் காற்று அதிகமாக வீசியுள்ளது. இந்த நிலையில், அவர்கள் சென்ற வழியிலிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மூர்த்தி, அவரது மகன் முகிலன் மீது விழுந்துள்ளது.
இத்தகையச் சூழலில், 3 வயது குழந்தையான முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, உடனடியாக இருவரையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, காயம்பட்ட மூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உயிரிழந்த சிறுவன் முகிலனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.