திருப்பத்தூர்: வாணியம்பாடி வி.கே.எஸ். காலணி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது. அப்போது, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜான் (எ) ராஜ்குமாரை வாணியம்பாடி தனிப்படை காவல்துறையினர் சேலத்தில் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதர், கார்த்திக், அப்புன்ராஜ் ஆகிய 3 பேரையும் ஆகஸ்ட் 22ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சந்துருவின் கொலையை கண்டித்து கோணாமேடு புத்தர் நகர் பகுதியில் வீடுகள் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவத்தில், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 20 பேர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 12 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை! சென்னையில் சோகம்!
இந்நிலையில் சந்துரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்