சென்னை: கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஜெரால்டு, கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள
தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் வந்த ராட்வீலர் நாய், ஜெரால்டை கொடூரமாக கடித்து குதறி உள்ளது. இதனால் காது, முதுகு, கண்ணம், தலை உள்ளிட்ட பகுதிகளில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஜெரால்டின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தந்தை, கடித்துக் கொண்டிருந்த ராட்வீலர் நாயிடம் இருந்து மகனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு ஜெரால்டுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் சிறுவர்கள், சிறுமிகள் தாக்குதலுக்கு உள்ளாவது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாயின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், ராட்வீலர் நாய்க்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.