Published : Apr 14, 2024, 8:17 PM IST
தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோயிலில் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! - Tamil year special pooja
தஞ்சாவூர்: தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை திருக்கோயில் கும்பகோணம் மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரையின் முதல் நாளான தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு அறுபது திருப்படிகளுக்கும் சிறப்புத் திருப்படி பூஜை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழ் ஆண்டுகளின் 38வது ஆண்டான குரோதி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, 60 திருப்படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிவாச்சாரியார்கள் தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்தனர். பின்னர் பஞ்ச ஆர்த்தி செய்யத் திருப்படி பூஜைகள் இனிதே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் திருப்பனந்தாள் காசித்திருமடம் அதிபர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கட்டுமலை கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் மூலவர் சுவாமிநாத சுவாமியைத் தரிசித்தும், திருவிளக்குகள் ஏற்றி வைத்தும், பால் குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து வந்து அர்ச்சனைகள் செய்தும் மகிழ்ந்தனர்.