Published : Jun 3, 2024, 12:37 PM IST
மனைவியின் வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. விருதுநகர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு! - Sarathkumar Angapradakshinam
விருதுநகர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
அந்த வகையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிட்டுள்ளார். தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் நேற்றிரவு அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தார். இந்த பிராத்தனையின்போது, ராதிகா சரத்குமார் உடன் இருந்தார். ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் இந்த பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.