செருப்பைக் கழற்றி சண்டை.. அரசுப் பேருந்தில் களேபரம்.. தேனியில் நடந்தது என்ன? - Theni to Trichy Bus Fight
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jun 25, 2024, 6:48 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-06-2024/640-480-21793592-thumbnail-16x9-bus.jpg)
தேனி: தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அப்போது சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் பேருந்து தேவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்களது செருப்பைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துநர் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டபோது, சமாதானம் ஆகாமல் சண்டையிட்டுக்கொண்டே வந்தனர். இதனால் பேருந்தை தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஓரங்கட்டி, காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் இரண்டு நபர்களையும் அழைத்து மது போதையில் சண்டையிட்டுக் கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். பின் இருவரையும் வேறு பேருந்தில் போகச் சொன்னதை அடுத்து இரண்டு நபர்களும் பேருந்தில் உள்ள பயணிகளிடம் மன்னிப்பு கேட்டதால், மீண்டும் அதே பேருந்தில் திருச்சியை நோக்கி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அரசுப் பேருந்து தேவதானப்பட்டி பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்கியது.