Published : Jun 24, 2024, 7:22 AM IST
பள்ளத்தில் சிக்கித் தவித்த யானை குட்டி! மீட்டு தாயுடன் சேர்க்கப் போராடிய வனத்துறையினர் - நீலகிரியில் நெகிழ்ச்சி - baby elephant fell into the canal
நீலகிரி: 65 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதியில் வலம் வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், பல இடங்களில் விலங்குகள் சில சமயங்களில் கால்வாய்களில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன். இந்நிலையில், கார்குடி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பகுதியில் வனத்துறை வேட்டைத் தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹோம் பேட்டா வேட்டை தடுப்பு முகாம் பகுதியில் சிறிய கால்வாயில் பிறந்த சில நாட்களே ஆன குட்டி யானை விழுந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவுரைப்படி, வனப்பணியாளர்கள் கால்வாயில் விழுந்திருந்த குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு குட்டி யானையை பாதுகாப்பாக மீட்டெடுத்து தாய் யானையுடன் சேர்த்தனர். மேலும் தாயுடன் சேர்ந்துள்ள குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.