"பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுங்க ஆளுநர்" - தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் துரைமுருகன் கருத்து!
Published : 3 hours ago
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்த் தாய் வாழ்த்து அவமரியாதை விவகாரத்தில் ஆளுநர் 'திராவிட நல் திருநாடும்' என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக அதனை சுட்டிக்காட்டி வருபவர்களிடம் வம்புக்கு வருவது எப்படி சரியாகும்” என்றார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டு வருவதற்கு பதில் அளித்த அமைச்சர், “அனைத்து விவகாரத்திற்கும் அதிமுக வெள்ளை அறிக்கை கேட்கும், வேண்டுமானால் வெள்ளை பேப்பரில் கருப்பு மையில் நாங்கள் செய்த அனைத்து திட்டங்களையும் எழுதி அறிக்கையாக கொடுக்கிறேன். அதை படித்து கொள்ளட்டும்” என்றார்.