திருச்செந்தூர் கடலில் விழுந்த 5 சவரன் தங்க நகை.. 4 மணி நேரத்தில் கிடைத்தது எப்படி? - gold chain recovered in Tiruchendur
Published : Jun 24, 2024, 5:08 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் குடும்பத்தினர் 11 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்துள்ளனர். பின்னர், சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் கடலில் புனித நீராட வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி தன் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயின் கடலில் விழுந்ததாகக் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஜோதியின் உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், கோயில் கடல் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சுமார் நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு கடலில் விழுந்த ஐந்து பவுன் தங்கச் செயினை கோயில் கடல் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கண்டுபிடித்து போலீசார் முன்னிலையில் தங்கச் செயின் உரிமையாளர் ஜோதியிடம் ஒப்படைத்தனர்.