பள்ளிவாசல் திறப்பு விழா..சீர்வரிசையுடன் சென்ற இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்! - Inauguration of the mosque
🎬 Watch Now: Feature Video


Published : Mar 11, 2024, 8:01 AM IST
திருநெல்வேலி: மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் திருநெல்வேலியில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என முன்று மதத்தினரும் தங்களது சீர்வரிசைகளுடன் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே மனக்காவலம்பிள்ளை நகரில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஹம்ஸா முஹைதீன் ஜும்ஆபள்ளிவாசல் திறப்பு விழா நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இந்த பள்ளிவாசல் திறப்பிற்கு ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து சமத்துவமாக இனிப்பு வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆரத்தழுவி, வரவேற்பு கொடுத்து சீர்வரிசை பொருள்களைப் பெற்றுக்கொண்டு பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். பிறகு அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.