Published : Feb 12, 2024, 10:01 AM IST
வத்தலகுண்டில் இயற்கை விழிப்புணர்வு மாரத்தான்: கைகளில் செட்டிகளுடன் ஓடிய குழந்தைகள்
திண்டுக்கல்: இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி வத்தலகுண்டில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், கைகளில் மரக்கன்றுகளை ஏந்திய வண்ணம் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்துவதற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று (பிப்.11) நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாகத் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை, வத்தலகுண்டு ஒன்றிய குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் துவக்கிவைத்தார். ஆடவருக்கான மாரத்தான் ஓட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் தொடங்கி, சிங்காரக்கோட்டை வரையில் 7 கி.மீ நடைபெற்றது.
இதேபோல் மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக தனித்தனி பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் கலந்துகொண்ட பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவர்கள், கைகளில் மரக்கன்றுகளை ஏந்திய வண்ணம் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம், பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.