திருவண்ணாமலையில் கனமழை..இடி விழுந்து 6 கடைகள் சேதம்! - shop damaged by lightning
Published : Jun 3, 2024, 9:36 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் போது கடையின் மீது இடி விழுந்ததில் அடுத்தடுத்த கடைகளும் இடி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அப்பகுதியில் இருந்த 6 கடைகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று, திருவண்ணாமாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையில், அருணாசலேஸ்வரர் கோயில் அருகில் உள்ள மாட வீதியின் காந்தி சிலை அருகே உள்ள ஒரு பைப் கம்பெனியின் கடையின் மீது இடி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயானது மளமளவென பரவி அருகில் உள்ள சில்லறை விற்பனை பிளாஸ்டிக் பொருட்கள் கடையிலும் பரவியது. இதைத்தொடர்ந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதி முழுவம் கரும்புகையால் சூழப்பட்டிருந்தது. மேலும், இவ்விபத்தில் அப்பகுதியில் இருந்த 6 கடைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.