கன்னியாகுமரி: இந்தியாவில் அதிக தூரம் மற்றும் அதிக நாட்கள் பயணிக்கும் ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், பீகார் வழியாக அசாம் மாநிலம் வழியாகச் செல்லும்.
சுமார் 80 மணி நேரம் 15 நிமிடங்கள் பயணித்து திப்ரூகர் ரயில் நிலையத்தைச் சென்று அடையும். அதேபோல், மறுமார்க்கமாக திப்ரூகரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45க்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 11 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது. சுமார் 4 ஆயிரத்து 273 கி.மீ தூரம் இந்த ரயில் பயணிக்கும்.
மேலும், இந்த ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். அதன் பின்னர், அது கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) ரயிலை பராமரிப்பு பணிகளுக்காக ரயிலின் பெட்டிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் முடிந்து நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி கொண்டு செல்ல ரயில் பெட்டியுடன் இன்ஜின் இணைக்கப்படும் போது, ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. அதனை அடுத்து, ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
குறிப்பாக, இந்த தண்டவாளம் வழியாக ரயில் சேவை இல்லாத காரணத்தால், ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சீட்டுக்கே சீட் பெல்ட்.. கேர்மாளம் அரசுப் பேருந்தின் அவல நிலை!