திருச்சி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிக்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். ஏற்கனவே, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்துள்ளது. இதுபற்றி விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதேபோல நீலகிரி, ஈரோடு பகுதிகளிலும் சிசிடிவி கேமரா செயலிழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, தாலியைப் பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்னையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ, அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், அதற்கு மாறாக நட்டாக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது” என்றார்.
தொடர்ந்து, இதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வருகிற 9ஆம் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன்.
இதேபோல் மகாராஷ்டிராவின் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது டெல்லி முதலமைச்சரை கைது செய்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அதேபோல, ஹேமன் சோரன் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார்.
அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளும் காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: "எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல் - Nellai Congress Leader Jayakumar