தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி காஞ்சனா தேவி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், அந்த இரண்டு வயதுக் குழந்தை நேற்று (பிப்.2) மாலை சலவைக்காக அண்டாவில் முக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், ஊர வைக்கப்பட்ட துணியை அண்டாவை விட்டு வெளியை எடுத்து, போட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக தண்ணீர் நிரம்பியிருந்த அண்டாவில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து, மூச்சு விடமுடியாமல் தத்தளித்துள்ளது. அந்த நேரம் குழந்தையை யாரும் பார்க்காததால், அண்டாவில் விழுந்த குழந்தை தலைக்குப்புற கவிழ்ந்த படியே இருந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து குழந்தையின் தாய் காஞ்சனாதேவி அண்டா அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதைக் கவனித்து, குழந்தையை வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என, குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அண்டாவிற்கு அருகே சென்று அண்டாவிற்குள் பார்த்துள்ளார்.
அப்போது குழந்தை அண்டாவிற்குள் தலைக்குப்புற கவிழ்ந்த படி கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை உடனடியாக மீட்டு அருகிலிருந்த பசுவந்தனை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த செவிலியர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவை எனக் கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கு...குற்றவாளி வினோத்துக்கு மரணதண்டனை!
அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் ஆய்வாளர் கோகிலா, குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.