சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றிரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மழை பாதிப்புகள் மற்றுந் நிவாரணப் பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டல வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொளி வாயிலாக கேட்டறிந்தார்.
காணொளி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிலையில், அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 17 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும் மழை முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று நாராயனபுரம் பகுதியில் நான் ஆய்வு செய்தபோது மழை வெள்ள நீர் தடுப்புகளை உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை இன்று உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 14 நிவாரண மையங்களில் 608 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 45,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் 6 சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளன. அதில் மேட்லி , பெரம்பூர் சுரங்க பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில். சென்னையில் இன்று மொத்தம் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 4,500 பேர் பயனடைந்துள்ளனர். சளி, காய்ச்சல், தோல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு இம்முகாம்களில் மருத்துவர் உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை பொதுமக்களுக்கு அளித்துள்ளனர்.