கோவை: ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் Focus Edumatics எனும் தனியார் IT நிறுவனம் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவைச் சார்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் இனி யாரும் பணிக்கு வரவேண்டாம் என மெயில் அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடை ஊழியர்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு settlement, gratuity உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என கோரி அந்நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊழியர் செளமியா கூறுகையில், "எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி கம்பெனியை மூடிவிட்டனர். நாங்கள் இந்த மாதம் முழுவதும் பணிபுரிந்து இருக்கிறோம். எங்களது சம்பளம் குறித்து எதுவும் கூறவில்லை. எங்களுக்கு தரப்பட வேண்டிய பண பலன்களும் அது பற்றியும் எதுவும் பேசவில்லை. இந்த நிறுவனத்தை மூடினாலும் வேறு ஒரு பெயரில் செயல்படுத்தி மீண்டும் எங்களுக்கு பணி வழங்க வேண்டும்" என கூறினார்.