மதுரை: கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலைs சமாளிக்க திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி - எலகங்கா சிறப்பு ரயிலானது (06045), வரும் மே 22, 29 மற்றும் ஜூன் 5, 12 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருநெல்வேலியிலிருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எலகங்கா சென்றடையும்.
அதேபோல், எலகங்கா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23, 30 மற்றும் ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் எலகங்கானாவிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 06.45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எலகங்கா - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்கள், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் பெங்களூருவில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'ஜெண்டர் ரிவீல்' செய்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்! - Irfan Gender Reveal Issue