திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (19). இதேபோல், முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (22). நண்பர்களான இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த இவர்கள், புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ஆரணியில் நேரத்தைக் கழித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
சரண்ராஜ், ராஜேஷ் ஆகிய இருவரும் மணிகண்டனை வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது, ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, மூவரின் சடலங்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.