திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் கோகுல் (13), 5ஆம் வகுப்பு பயின்று வரும் யாதேஸ்வர் (10) மற்றும் 5ஆம் வகுப்பு பயின்று வரும் டாங்லின் இன்பராஜ் (10) ஆகிய மூன்று பேரும் இன்று (டிச.07) பள்ளி விடுமுறை என்பதால் கொசவபட்டியில் உள்ள பேபி குளம் என்ற ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது மூன்று பேரும் ஊரணியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆழமான பகுதிக்கு சென்று குளித்த பொழுது நிலை தடுமாறி நீரில் மூழ்கியதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபொழுது மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வெகு நேரமாகியும் குளிக்கச் சென்றவர்கள் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடிய நிலையில், அவ்வழியாகச் சென்றவர்கள் கரையின் மேலே மூவரது உடைகள் இருந்ததைக் கண்டு ஊரணியின் உள்ளே பார்க்கும் பொழுது ஒருவரின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்தவர்கள் ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அட்டவணை மாற்றம்.. கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்..!
அதன் பின்னர், ஊர் பொதுமக்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களின் உதவியோடு தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் கழித்து நீரில் மூழ்கி இறந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.