கோயம்புத்தூர்: பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பிரவீன், கவின், தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆகிய 4 மாணவர்கள், தீத்திபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் நால்வரும் பெருமாள் கோவில்பதி கிராமத்தில் உள்ள முண்டாந்துறை தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர்.
சுமார் 40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில், தற்போது 15 அடிக்கு நீர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீச்சல் தெரியாமல் தடுப்பணையில் குளிப்பதற்கு இறங்கிய பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.
இந்நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காருண்யா நகர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காருண்யா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.