சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் நேற்று பலத்த மழை பெய்தது. இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழை காரணமாக குடியிறுப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனை தவிர்க்கும் விதமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் மீட்க முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில், மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டம் இன்று நடைப்பெற்றது.
இதையும் படிங்க: ஓய்ந்தது கனமழை; வழக்கம்போல நம்பிக்கையுடன் கண்விழித்தச் சென்னை!
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த ஒத்திகையை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளுக்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ட்ரோன்கள் மூலமாக பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்