சென்னை: தமிழ்நாட்டில் கொக்கைன் போதைப் பொருளைப் பயன்படுத்துகின்ற நடிகர், நடிகைகளைக் கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை சார்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தமிழகத்தில் கொக்கைன் போதைப் பொருளைப் பயன்படுத்துகின்ற நடிகர், நடிகைகளைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி, “நடிகர் விஜய், தனுஷ், சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்தி உள்ளிட்டோர் கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார். இந்நிலையில் சுசித்ரா குற்றம்சாட்டியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் இல்லத்தில் இந்த போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டிய நிலையில் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். தற்போதைய சினிமாத்துறை நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய துறையாக இல்லாமல் காமத்துறையாக இருப்பதாகவும்,நடிகர் விஜய் போன்றவர்கள் தான் சம்பாதித்த பணத்தை ரசிகர்களுக்குச் செலவு செய்யாமல் வயதான பிறகு அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
நடிகர்கள் மீது கொடுத்த புகாரை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பிரபலங்களுக்கு ஒரு சட்டமா என்றார். மேலும், சினிமா துறையில் பல்வேறு நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனைக் கண்டு கொள்ளாத விஜய் தமிழகத்திற்கு அரசியலுக்கு வருகை தந்து என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் சீமான் கட்சியில் உள்ள சின்னம் புலி அல்ல பூனை, உண்மையான தமிழச்சி நான்தான் புலி சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழரே இல்லாத சீமான் சோழர்களின் சின்னமான புலி சின்னத்தைப் பயன்படுத்தும் போது தமிழச்சியான நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என கூறினார்.தமிழர் முன்னேற்றப்படை இயக்கமாக இருந்த நிலையில் இனிமேல் கட்சி ரீதியான செயல்பாட்டில் நடவடிக்கை இருக்கும் என்றார்.