கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான எட்டிமடை பகுதியில் பிரபலமான அமிர்தா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டும் இல்லாது, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வரும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவர்களுக்குத் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனை மாணவர்கள் பலமுறை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உறிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள் நேற்று (மார்ச் 17) இரவு பல்கலைக்கழகத்தின் விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக அசுத்தம் நிறைந்த குடிநீர் வழங்கி வருவதாகக் கூறிய மாணவர்கள் கல்லூரி விடுதியிலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், மாணவர்களின் போராட்டம் தற்போது வரை நீடித்து வருகின்றது. இதுமட்டும் அல்லாது, விடுதி மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் சம்மந்தப்பட்ட அமிர்தா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விடுதி மாணவர்களின் போராட்டம் காரணமாகப் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மாணவர்கள் போராட்டம் குறித்து தங்களுக்குப் பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் தேர்தல் கண்காணிப்பு வாகனங்களில் ஜிபிஎஸ், சோலார் கேமரா பொருத்தம்