கிருஷ்ணகிரி: பிப்ரவரி மாதம் என்றாலே காதலரகள் மகிழ்ச்சியாகி விடுவர். உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பிரபோஸ் டே, ரோஸ் டே என பல பெயர்களில் காதலர்கள் கொண்டாட ஆயத்தமாகின்றனர். அந்த வகையில் காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜா மலர்களை ஒரு முக்கியமானதாக கருதுகின்றனர்.
இந்த ரோஜா மலர் விளைச்சலில் தமிழ்நாட்டின் எல்லையான ஓசூர் பெயர் பெற்றது ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் நகரம் என்பது உலகம் அறிந்த தகவல், அதே போல் ரோஜா மலர் சாகுபடியிலும் முன்னிலையில் உள்ளது. ஓசூரில் வருடம் முழுவதும் தகுந்த சீதோஷ்ன நிலை நிலவி வருவதால் காய்கறி விளைச்சல் மட்டுமின்றி, மலர்கள் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் பேரிகை போன்ற பல பகுதிகளில் விவசாயிகள், பசுமை குடில்கள் மூலம் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் தாஜ்மஹால், கிராண்ட் காளா, அவலான்ஸ், நோ ப்ளஸ் உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட வகையான மலர்களை விளைவிக்கின்றனர். தற்போது காதலர் தினத்திற்கு விவசாயிகள் மற்றும் வேலை ஆட்கள் இப்பணியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
வருடம் முழுவதும் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் குறிப்பாக கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் காதலர் தினங்களில் அதிக அளவில் விளைச்சலை பெருக்கி வருகின்றனர். இந்த மலர்கள் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் இந்த வருடம் உள்ளூர் சந்தைகளில் விற்பனை அதிகரித்து, வருவாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து மலர் விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் சீதோஷ்ன நிலை மாறிவிட்டதால் பனியின் தாக்கம் காரணமாக மலர் விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது. காதலர் தினத்திற்காக ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக விமான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி வரியினால் ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் உள்நாடுகளில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கொல்கத்தா, மும்பை போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கும் விவசாயிகள், தங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒரு பூ ரூ.18 முதல் ரூ.20-க்கு விலை போவதாக தெரிவிக்கின்றனர். இதனால் இந்த வருட நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டயர் வெடித்து விபத்து: வாகனம் கவிழ்ந்து சாலையில் கொட்டிய மீன்கள்...அள்ளிச் சென்ற பொதுமக்கள்... - FISH LOAD VAN ACCIDENT
அதேசமயம் தற்போது தமிழ்நாடு அரசு, மலர் சாகுபடிக்கு அதிகளவில் உதவி புரிந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இப்பகுதியில் ஏற்றுமதி ஏல மையம் கட்டி முடிக்கப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகள் ஆன பின்னும் முழு பயன்பாட்டிற்கு வரவில்லை, எனவே பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.