கோயம்புத்தூர்: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப்.15) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், கோவையில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்திருந்த தேமுதிக விஜயபிரபாகரன், அதிமுக அலுவலகம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவுடன் சேர்ந்து அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கி இன்றைக்கு சாதாரண ஏழை எளியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்துள்ளது. அதேபோல சாமானியனும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சராக ஆகலாம் என்ற நிலைக்கு வித்திட்டவர் அண்ணா.
இதையும் படிங்க: "அன்னபூர்ணா விவகாரம் தேவையற்ற விஷயம்" - விஜயபிரபாகரன் கருத்து!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். கோவையைப் பொறுத்தவரை திமுக எந்த நலத்திட்டதையும் செய்யவில்லை, மக்கள் எப்போது சட்டமன்றத் தேர்தல் வரும் என காத்திருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமான சாலைகள், பாலங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என பல்வேறு திட்டங்கள் செய்து தரப்பட்டது.
இன்று அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்றுக் கொள்ளுகிறேன், அடுத்த தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராவார். இன்று ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் அதிகமான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். அதனால் அவர்கள் அனைவருக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை அதிமுக சார்பாகவும், எடப்பாடி சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.