திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர், தனது நண்பர்கள் அசோக், பாபு, திலிப் புருஷோத்தமன், மனோஜ் ஆகியோருடன் திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் சென்ற காரை மனோஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில், கார் கேத்தாண்டபட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது தந்தை ஜெகதீஷ், மனைவி சரண்யா மற்றும் குழந்தைகள் முகில் ஆதி, சிபியுகன் ஆகியோருடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தங்கராஜ் ஒட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலை இடையே இருக்கும் தடுப்புகளை உடைத்து, எதிர் திசையில் பாய்ந்து, சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு கார்களிலும் பயணித்த 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கிக் கொண்டனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், விரைந்து சென்று விபத்துக்குள்ளான கார்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் சாலையின் குறுக்கே நின்றதை அடுத்து, நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை போலீசார் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ஜீப் மோதல்.. விருதுநகரில் 3 பேர் உயிரிழப்பு!