அரியலூர்: செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையைப் பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினரும் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இன்று காலை செந்துறை, உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறையினர், இரண்டு உதவி கால்நடை மருத்துவர்கள், பொள்ளாச்சியில் இருந்து சிறுத்தை நடமாட்ட ஆய்வாளர் உள்ளிட்ட 25 பேர் தற்போது செந்துறை பகுதியில் முகாமிட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.
செந்துறை தாலுகாவில் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பகுதிகளில் மாவட்ட முழுவதும் மதிய உணவு முடிந்தவுடன் மாணவர்களைப் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேசிய மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், "சிறுத்தை நடமாட்டம் செந்துறை பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க 25 நபர்கள் கொண்ட குழுவினருடன் சிறுத்தை நடமாட்டத்தை தற்போது கண்காணித்து வருகிறோம்.
சிறுத்தை நடமாடிய செந்துறை நகர்ப் பகுதி மற்றும் அருகிலுள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல் சிறுத்தை பிடிக்கக் கூண்டு, வலை மற்றும் மீட்பு உபகரணங்கள் கொண்டுவரப்படுகிறது.
மேலும் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்ட இடங்களில், கூண்டுகள் வைத்து அதற்குள் பன்றி, ஆடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, சிறுத்தை பிடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் தகவல் அளித்தால், உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர். மயிலாடுதுறையில் காணப்பட்ட சிறுத்தைக்கும், தற்போது செந்துறையில் காணப்பட்ட சிறுத்தையும், ஒன்றா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
சிறுத்தை பிடித்த பின்பு அதனுடைய அளவீடுகள் மற்றும் போட்டோவுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும்” என்று கூறினார். சிறுத்தையை நேற்று இரவு நேரில் பார்த்த செந்துறை நகரைச் சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் கூறுகையில், "நேற்று இரவு சாலையில் நடந்து சென்ற போது சென்ற போது நானும் எனது குழந்தைகளும், சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்தோம்.
உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தோம். சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், வனத்துறையினரும் வந்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளனர். பொதுமக்கள் அச்சத்தைப் போக்க உடனடியாக சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஜம்ப்..! அரியலூர் அருகே செந்துறை அரசு மருத்துவமனையில் சுவரைத் தாவிக் குதித்த சிறுத்தை.. சிசிடிவி வைரல் - Leopard Movement In Ariyalur