சென்னை: இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரம்மமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நான் அரசியல் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன்.
இந்நிலையில், எனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் சங்ககிரி தாலுகாவில் உள்ளது. அந்த நிலத்தை நாங்கள் குறிப்பிடும் நபருக்கு எழுதிக் கொடுக்க வேண்டுமென சங்ககிரி டிஎஸ்பி ராஜா, மகுடம் சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரௌத்திரி வெங்கடேஷ் உள்ளிட்ட போலீசார் என்னை துப்பாக்கியால் மிரட்டுகின்றனர்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இவரது தாயார் தனலட்சுமி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனது மூத்த மகன் பிரம்மமூர்த்தியை போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எப்போது பிடிபட்டாலும் எனது மகனின் கை மற்றும் காலை உடைப்பேன் என்றும், என்கவுண்டர் செய்து விடுவோம் என்றும் போலீசார் மிரட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தற்போது வேண்டுமென்றே எனது மகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளனர். போலீசாரின் மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இலங்கை அணி தோற்றதால் இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு” - ஜெயக்குமார் பேச்சு! - Jayakumar about Fishermen arrest