திருநெல்வேலி: நெல்லையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்திவரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்துக்கு சிங்கம்பட்டி ஜமீன் கொடுத்த 99 ஆண்டு குத்தகை காலம் 2028ஆம் ஆண்டு முடிவடைய உள்ளதால், முன்கூட்டியே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது.
மேலும், அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், சுமார் 4 தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்த தொழிலாளர்கள், மாஞ்சோலை பகுதியை விட்டு கீழே இறங்க மனம் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியிலே தொடர்ந்து வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலைக்குச் சென்று தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதை அறிந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (ஜூலை 01) தொழிலாளர்களை சந்திக்க மாஞ்சோலை சென்றார்.
இதனை அடுத்து, மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள சோதனைசாவடியில், காவல் துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, போலீசார் குறிப்பிட்ட சிலரை மட்டுமே மாஞ்சோலை மலைக்கிராமங்களுக்கு அனுமதித்து வருகின்றனர். இதன் காரணமாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை செல்லும்போது, அவருடன் வந்த கட்சி உறுப்பினர்களை மாஞ்சோலை செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில், போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக கும்பகோணம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்!