புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி சவுரியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி மாலதி, இவர்கள் ஆடு, மாடுகள் மேய்த்தும், அன்றாட கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இருக்க இடம் கூட இன்றி, மாட்டு கொட்டகையில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக, மாலதி தனது கணவரை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டாக உள்ள தஞ்சாவூர் மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கடந்த ஓராண்டிற்கு முன்பு மலேசியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும், மாதம் 30 ஆயிரத்திற்கும் மேல் ஊதியம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி, நம்ப வைத்து மாலதியின் கணவர் சதீஷ்குமாரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மலேசியாவில் கூலி வேலை செய்து வந்த சதீஷ்குமாருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தான் வேலை செய்து வந்த நிறுவனத்திடம் சதீஷ்குமார் கேட்ட பொழுது, அதற்கு நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய சதீஷ்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை நம்பி தனது குடும்பம் உள்ளதாகவும், தன்னை ஊருக்கு அனுப்ப வேண்டும் என நிறுவனத்திடம் கேட்டதற்கு தன்னைக் "கொன்று தான் அனுப்புவேன்" எனவும், நிறுவனத்தில் பணிபுரியும் மேலதிகாரிகள் தெரிவித்ததாகவும், தான் உண்ண உணவின்றி தவித்து வருவதாகவும், ஊதியம் கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி வீடியோ பதிவு ஒன்றை சதீஷ்குமார் தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோ பதிவில் உடனடியாக தன்னை மத்திய, மாநில அரசுகள் மீட்டு தனது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக சதீஷ்குமார் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தனது கணவனை மீட்க கோரி மாலதி மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
![join ETV Bharat Whatsapp channel click here](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-07-2024/22058947_whatsup.jpg)
இதையும் படிங்க: அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா? அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு!