மயிலாடுதுறை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (34). இவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
மனைவி குழந்தைகள் சொந்த ஊரில் உள்ள நிலையில், திருநாவுக்கரசுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். போனில் பேசும்போது திருநாவுக்கரசுக்கும், நண்பரின் மகளான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி நண்பரின் மகளான 16 வயது சிறுமியை வீட்டிற்கு வரவழைத்த திருநாவுக்கரசு, குளிர்பானத்தில் ஓட்கா மதுபானத்தை கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து 1098 சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ், பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த விசாரணையின் அடிப்படையில், ஆரோக்கியராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தை அடுத்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது.. தாய் மீதும் வழக்குப்பதிவு!