சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மக்களின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வீரியமாக பிரதிபலிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில், தலைமை நிர்வாகக் குழுவால் முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த மார்ச் 16ஆம் தேதியன்று, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது, மஜக தலைமை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இதற்கிடையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி, தனது ஆதரவாளர்களுடன் இன்று அறிவாலயம் சென்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே அவர் செய்த செயலாகும்.
தமிமுன் அன்சாரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியையும், கட்சியின் பெயர், கொடியை அவர் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதையும் மக்கள் அறிவர். ஆனால், தடை கேட்டது குறித்து நீதிமன்றத்தில் முறையாக விளக்கம் அளிக்காமல், வாய்தா வாங்கிக் கொண்டு அரசியல் குழப்பம் செய்யும் தமிமுன் அன்சாரியின் உண்மை முகத்தை மஜக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.
எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மஜக தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். கூட்டணியின் வெற்றிக்கு நாடு முழுவதும் களப்பணி ஆற்றுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூஜைக்காக மட்டும் திறக்கப்படும் திரவுபதி அம்மன் கோயில்.. பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உத்தரவு!