சென்னை: 1971 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின் படி, உலகெங்கும் உள்ள சதுப்பு நிலங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து ராம்சார் தலங்கள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
1982 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில், ராம்சார் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கு அடுத்ததாக 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 49 புதிய சதுப்பு நிலங்களை ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஈர நிலங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்தி காடுகள் போன்றவை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.
மேலும், 115.15 கோடி ரூபாய் செலவில், 100 நிலங்களில் மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் ராம்சார் குறியீடுகள் கிடைக்கபட்டு உள்ளன. குறிப்பாக மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம், கூந்தன்குளம், வேம்பனூர் சதுப்பு நிலம், வெள்ளோடை, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம், கோடியக்கரை போன்றவை இதில் அடங்கும்.
தற்போது, தமிழகத்தில் கரைவெட்டி பறவைகள் காப்பகம் மற்றும் லாங்வுட் சோலை காப்பக காடுகள் ஆகிய இரண்டு இடங்களுக்கு தற்போது ராம்சார் குறியீடு கிடைத்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் 14 இடங்களுக்கு ராம்சார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், தற்போது மேலும் 2 இடங்களுக்கு ராம்சார் குறியீடு அளிக்கப்பட்டு, 16 ஆக அதிகரித்து உள்ளது.
இது குறித்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வெளியிட்ட செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கரைவெட்டி பறவைகள் காப்பகம் மற்றும் லாங்வுட் சோலை காப்பக காடுகள் ஆகிய இரண்டு இடங்களுக்கு ராம்சார் குறியீடு வேண்டி, தமிழக அரசு சார்பில் முன்மொழியப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (ஜன:31) தமிழகத்திற்கு இரண்டு ராம்சார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில், சதுப்பு நிலம் 16 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில், அதிக ராம்சார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், மத்திய ஆசிய பறவைகள் வழிதடத்தில் அமைந்துள்ளது. இந்த மத்திய ஆசிய வழித்தடம், அதிக அளவில் பறவைகள் வலசை செல்லும் பாதையாக இருந்து வருகிறது. இந்த பாதையில் அமைந்துள்ள, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் சுமார் 500-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பல்லுயிர் காப்பகமாக உள்ளது. இது சுமார் 453.7 ஹெக்டேர் அளவில் அமைந்துள்ளது.
லாங்வுட் சோலை காப்பக காடு: லாங்வுட் சோலை காப்பக காடு, நீலகிரி மாவட்டத்தில், சுமார் 117.07 ஹெக்டர் அளவில் அமைந்துள்ளது. இந்த இடம், பறவைகளுக்கான, பல்லுயிர் இடமாகவும் உள்ளது. இந்த காடுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் பல்லுயிர்கள் உள்ளன. இதில் 117 பறவைகள் கண்டெக்கபட்டு உள்ளன. மேலும், 14 பல்லுயிர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை வாழ்விடமாக கொண்டுள்ளன. மேலும் பாதுகாக்கபட்ட வன உயிர்களும் உள்ளன” என தெரிவிக்கபட்டு உள்ளது.
இதையும் படிங்க: வண்டலூர் வந்த கான்பூர் பறவைகள்! விலங்குகள் பரிமாற்றம் மூலம் வண்டலூருக்கு வருகை!