வேலூர்: சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஆக.30) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய துரைமுருகன், "பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை.
ஆனால், நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால், தற்போது மீண்டும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலத்தினால், என்னை பிடிக்காதவர்கள்கூட நூறு ஆண்டுகளுக்கும் என் பெயரைச் சொல்வார்கள். மேலும், காட்பாடியில் இருந்து சித்தூர் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நான் என்னுடைய தொகுதியை கோயிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோயில். என்னை வளர்த்தவர்கள் நீங்கள், என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து, சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் உயிர் பிரியும்போது காட்பாடி என்று எனது தொகுதியின் பெயரை சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்" என்று உருக்கமாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழகத்தில் உள்ள 1,281 தரைப்பாலங்களை உயர் மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், 906 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள பாலங்களையும் விரைந்து உயர்மட்ட பாலங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா புறவழிச் சாலை அமைக்க ரூ.9 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் சொன்னது பொய்.. எச்.ராஜா ஆவேசமானது ஏன்?