வேலூர்: மகளிர் விடியல் பயண புதிய 5 நகரப் பேருந்துகள், 17 புறநகர் பேருந்துகள் மற்றும் கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வழித்தட பேருந்துகள் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு 22 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “மக்களின் நலன் கருதி நிறைவான சேவையை தமிழக அரசு போக்குவரத்து துறை செய்து வருகிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு பேருந்துகள் சரியான முறையில் நின்று செல்கிறதா? என்பதை மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வசதியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். தன்னுடைய வசதிக்கு ஏற்ற பேருந்துகளை இயக்குவது சரியானது அல்ல. மேலும், கிராமங்களுக்கு தங்கு தடையின்றி பேருந்துகளை இயக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
மேகதாது பிரச்சனையில் திமுக அரசு பணம் பெற்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்துசெய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அண்ணாமலை விவரம் தெரிந்தவர் என்று நினைத்திருந்தேன். அவர் விவரமே தெரியாதவர் என தற்போது தான் தெரிகிறது. நான் அவருடன் பழகி பார்த்திருக்கிறேன்” என்றார்.
கேரளா நிலச்சரிவு சம்பவத்தை மத்திய அரசு பேரிடராக அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, “கேரளா நிலச்சரிவு சம்பவம் இதயம் உள்ளவர்களை அழவைத்த நிகழ்வு. இந்தச் சம்பவத்தை கூட பேரிடர் நிகழ்வாக கருத மாட்டேன் என்றால் அவர்களுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்று தனக்குத் தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. வேலூர் புதிய பேருந்து நிலையம் வரும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநகராட்சியும் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்! - tiruchendur beach