சென்னை: சென்னை, திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோயிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கோயில் பெண் தர்மகர்த்தா வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கோயில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை புறக்கணித்து விட்டு, பெண் தர்மகர்த்தா கோயில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதுடன், ரீல்ஸ் வீடியோ எடுத்தது பக்தர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் பெண் தர்மகர்த்தா வளர்மதி உள்ளிட்டோர் சாமி படத்துக்கு கீழ் இருக்கையைப் போட்டுக் கொண்டு, ராஜினாமா செய்வதாகக் கூறி, அரசு என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி தண்டபாணி, கோயில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? எல்லாரும் வேப்பிலைக் கட்டி வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் நிலையில், சாமி மீது பயம் வேண்டாமா? இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தைத் தீவிரமாக பார்ப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அக்டோபர் 29ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்