சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக இருந்த ரகு, பூங்காவிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், அவரின் மகள் சுரக்ஷாவை கடந்த மே 5ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த புகழேந்திக்கு சொந்தமான வெளிநாட்டு இனங்களான இரண்டு ராட்வீலர் நாய்கள் கடித்துக் குதறின.
இதையடுத்து நாய்களை கவனக்குறைவாக கையாண்டதாக உரிமையாளர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனது மகளுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சோனியா சார்பில் ஜூன் 11ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது அரசு முடிவு செய்யாததால், இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சிறுமியின் தாய் சோனியா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நாய் கடித்ததற்கு அரசை பொறுப்பாக்க முடியாது. தனி நபருக்கு சொந்தமானது என்பதால் நாயின் உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு பெறலாம் என தெரிவித்து, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னை பயணிகள் கவனத்திற்கு..புறநகர் ரயில் சேவை ரத்து மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு!