சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குறிப்பிட்ட அந்த நிலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமானதா இல்லையா என்பது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்த பதிவேட்டை முறையாகப் பராமரிக்காத, பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்த கோயில் நிர்வாகம், சிபிஐ விசாரணை நடத்தப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோயில் நிர்வாகம் தரப்பில் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, சிபிஐ விசாரணை நடத்தும் படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.