சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில், கல்வி சம்பந்தமான திரைப்படங்களைத் திரையிட அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கடந்த 2022 - 2023ஆம் கல்வியாண்டு வரை பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களைத் திரையிட அனுமதி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடப்பு 2023 - 2024ஆம் கல்வியாண்டில் இது சம்பந்தமாக அரசு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை எனவும், திரைப்படங்களைத் திரையிட அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், 2024 - 2025ஆம் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவதற்கான அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பான கோரிக்கை மனுவைப் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: லெமன் சிட்டியில் 1 கிலோ லெமன் ரூ.150க்கு விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி! - Lemon Price Increase