கரூர்: கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (ஏப்.7) மதியம் 1.30 மணியளவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி, பாமக மாவட்டச் செயலாளர் புகலூர் சுரேஷ், அமமுக கரூர் மாவட்டச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், நான் ஆங்கிலத்தில் பேசட்டுமா அல்லது இந்தியில் பேசட்டுமா என்று கேட்டுவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது, “கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் மிகவும் திறமையானவர். அவர் வெற்றி பெறுவதற்காக நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பிரதமர் மோடி சென்றபோது, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், மொழியையும், தமிழ் மீதுள்ள பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்கும், வாரணாசி நகருக்கும் உறவை ஏற்படுத்தும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் என்ற அமைப்பைக் கொண்டு ஒற்றுமையை வலிமைப்படுத்தியுள்ளோம்.
கரோனா போன்ற காலகட்டத்தில், உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர், இந்தியாவை வலிமையான பொருளாதாரமிக்க நாடாக மாற்றி இருக்கிறார். இங்கு பொருளாதார பணவீக்கம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால், உலகில் மிகப்பெரிய பொருளாதாரமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவை மூன்றாவது இடத்தில் நிச்சயம் அமர வைப்போம். இந்தியாவின் ஏற்றுமதி ரூ.70,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்று சொந்த நாட்டில் நாம் அனைவரும் பயன்படுத்தும் நவீன செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது அனைத்தும் சீன நாட்டு உற்பத்தி செல்போன்கள் மட்டுமே. மேட் இன் இந்தியா (Made in India) என்பது கார் உற்பத்தி, மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி, செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி என அனைத்திலும் இந்திய நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்தில் சொந்த நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேறி உள்ளது. மீண்டும் பாஜக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தால், நாம் இரண்டாவது இடத்தையும் பிடிப்போம்.
கிசான் மந்தன் யோஜனா: இந்தியப் பிரதமரின் 'கிசான் மந்தன் யோஜனா' திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா: சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள், கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு பயன்கள் வழங்கக்கூடிய 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' (Ayushman Bharat Yojana) திட்டத்தை, வங்கிகள் மூலம் சுமார் 55 கோடி மக்களுக்கு, அதாவது இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதத மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம்: இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் துவக்கப்பட்ட 'ஜல்ஜீவன் திட்டம்' மூலம் தமிழ்நாட்டில் மட்டும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 2 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கழிப்பிடங்கள்: இந்தியா முழுவதும் தனிநபர் கழிப்பறைகள் 4.12 கோடி பேருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 60 லட்சம் மகளிர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு, தனிநபர் கழிப்பிடங்கள் பிரதமரின் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 4 கோடி பேருக்கு வீடு இல்லாத ஏழை மக்களுக்குப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 14 லட்சம் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பிரதமர் மோடி திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் பிரதமர் மோடி தனிக் கவனமும் அக்கறையும் வைத்துள்ளார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும், திமுகவும் மக்களை ஏமாற்றி வருகிறது .
தமிழ்நாட்டின் நான்கு முறை நேரடியாகப் பிரதமர் மோடி வருகை தந்து எண்ணற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சென்னை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட நகரங்களை வளர்க்கும் வகையில், ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் இடங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்: இந்திய ரயில்வே பட்ஜெட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏழு மடங்கு அளவு நிதி தமிழ்நாட்டிற்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களை வளர்ச்சி அடையச் செய்வதற்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருந்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: தமிழ்நாட்டில் உள்ள 11 நகரங்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நரேந்திர மோடி அரசு பல்வேறு திட்டங்களையும் பல கோடி ரூபாய் நிதியையும் செலவிட்டு வருகிறது.
சனாதனத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது. தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் குடும்ப அரசியல் செய்பவர்களாகவும், ஊழல்வாதிகளாக இருக்கின்றனர்.
நாணயத்தின் இரு பக்கங்கள்: திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஊழல் செய்வதில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹெலிகாப்டர், 2ஜி, காமன்வெல்த் ஊழல் எனப் பல்வேறு ஊழல்களைச் செய்த கட்சிதான் காங்கிரஸ் கட்சி என்பதை மறந்து விடக்கூடாது.
DMK விரிவாக்கம்: DMK என்பதற்கு விரிவாக்கம் என்னவென்றால் D என்றால் Dynasty In M என்றால் Money Streaming, K என்றால் Katta Panchayat. இந்த இரண்டு கட்சியில் இருப்பவர்கள், ஒன்று சிறைக்குச் சென்று இருப்பார்கள் அல்லது சிறையிலிருந்து பிணை பெற்று இருப்பார்கள்.
ஊழல் செய்தவர்கள்: முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, அபிஷேக், சந்திரசேகர் ராவ் மற்றும் கவிதா சரத்பவார், உத்தவ் தாக்கரே, சிதம்பரம், சஞ்சய் சிங், மணி சுசிர்வால், அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டவர்கள் குடும்ப அரசியலும், ஊழல் செய்ததால் தான் சிறைக்குச் சென்றார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் தவறு செய்ததால் சிறைக்குச் சென்றவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆட்சிக்கு வர இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பிரதமர் மோடி எண்ணற்றத் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள், தொழிலாளர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே பாஜகவின் ஒரே நோக்கமாகும், கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த செந்தில் நாதனை நீங்கள் தேர்ந்தெடுத்து, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: "கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும்" - ஜான்பாண்டியன்! - Lok Sabha Election 2024