வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கான வி.ஐ.டியின் இலவசக் கல்வி சேவை வழங்கும் 7ஆம் ஆண்டு ஸ்டார்ஸ் தின விழாவானது பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டார். விழாவில், ஸ்டார்ஸ் திட்டம் மூலம் இலவசமாக வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் ரூ.4.30 லட்சம் மதிப்பிலான காசோலையை, கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்விபெறும் வகையில் வழங்கினர்.
இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். மாதா, பிதா, குரு என்பார்கள். எனவே, குரு சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடக்க வேண்டும். என்னுடைய ஆசிரியர், நீ திரைப்பட இயக்குநராக வருவாய் என்று அன்றே கூறினார்.
நான் நடிகனாக ஆசைப்பட்டேன். இறுதியில் இயக்குநராக பல படங்களையும் இயக்கியுள்ளேன். நாம் நம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை நோக்கிச் சென்றால் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: உலக பட்டினி தினம்: விஜய் போட்ட உத்தரவு..! பட்டித்தொட்டி எங்கும் பசியைப் போக்க எடுத்த முடிவு..! - TVK Vijay