சென்னை: போரூர், நியூ காலனியை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மகன் சாய் சஞ்சய் (13). தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சஞ்சய் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தனது நண்பர்களுடன் போரூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் விளையாட சென்றுள்ளார். விளையாடி முடித்துவிட்டு அங்கிருந்த குட்டையில் கை, கால்களை கழுவ சென்ற போது, நிலை தடுமாறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்டு பதறிப்போன அவரது நண்பர்கள், சாய் சஞ்சயை மீட்க முயன்றுள்ளனர். இருப்பினும் மீட்க முடியாததால், போரூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குட்டையில் தவறி விழுந்த சாய் சஞ்சயை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாய் சஞ்சய் குட்டையில் தவறி விழுந்த இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை குட்டைக்குள் தள்ளி விட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாளில் விளையாட சென்ற மாணவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![join ETV Bharat WhatsApp Channel click here](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-08-2024/22182645_card.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆவடியில் பாதாள சாக்கடை விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி! - Avadi corporation