சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 தமிழ்நாடு மீனவர்கள், நேற்று (டிச.06) வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
8 தமிழக மீனவர்கள் கைது: கடந்த ஜூன் 26, ஜூலை 1 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடலோர காவல்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 8 மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைதுள்ளனர்.
வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் கடிதம்: இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியியுள்ளார். இதன் காரணமாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க; தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்; இன்றும் 14 தமிழக மீனவர்கள் கைது - தீர்வு தான் என்ன?
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் சென்னைக்கு வருகை: இதனையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் 8 பேரையும் இலங்கையில் இருந்து சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 8 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இன்னும் அந்த நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பலரையும் இதே போல மீட்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்பதும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.