தேனி: தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் தேனி வடக்கு மாவட்டம் திமுக நகர அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் இருந்த 40,000 மதிப்பிலான மூன்று லேப்டாப் மற்றும் அதன் பேட்டரி ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புகாரின் பேரில் தேனி காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தார்.
கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேனி போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் கட்சியின் அலுவலகத்தை உடைத்து கொள்ளையடித்த சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார்(32) மற்றும் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன்(35) என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: ’விடாமுயற்சி’ ரிலீஸ்: தேனியில் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்திய அஜித் ரசிகர்கள்! - VIDAAMUYARCHI RELEASE
பின்னர் மதுரையில் பதுங்கி இருந்த இரண்டு நபர்களை தேனி போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் பல்வேறு திருட்டு, கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீது 331(4), 305 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.