பார்படோஸ்: 9வது டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. பார்படோசில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்தது.
வெற்றிக் கோப்பையை உச்சி முகர்ந்த மகிழ்ச்சியில் திளைத்த கோடான கோடி இந்திய ரசிகர்களுக்கு சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்து இறங்கிய செய்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலியும் அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒய்வு பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு தான்.
இரண்டு ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக செய்த காரியங்கள் எண்ணில் அடங்காதவை. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 50 டி20 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அதிக முறை டி20 கிரிக்கெட் போட்டிகளில் வென்ற கண்ட கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோகித் சர்மா.
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய அணியில் இருந்து விலகும் மூன்றாவது நட்சத்திரம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைகளை நூலிழையில் கோட்டை விட்ட போதும், இறுதி வாய்ப்பை வெற்றிக் கனியாக மாற்றிக் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் 2022ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை என ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இரண்டு பெரும் ஐசிசி தொடர்களை இந்தியா கோட்டைவிட்ட போதிலும் அதை மறக்கடிக்க செய்யும் வகையில் அமைந்தது 20 ஓவர் உலக கோப்பை வெற்றி.