பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் நீர் சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட பிரேசில் வீரர் சாகசம் நிகழ்த்துவதை பிரபல பிரான்ஸ் செய்தி ஏஜென்சியான ஏஎஃப்பியின் புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடவர் நீர் சறுக்கு விளையாட்டு Teahupo'o நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சாகசம் நிகழ்த்தினர். அதில் பிரேசிலை சேர்ந்த நீர் சறுக்கு வீரர் கேப்ரியல் மெதினா (Gabriel Medina) வானுயர்ந்த அலையின் மேலே ஒய்யாரமாக நீர் சறுக்கு செய்து சாகசம் நிகழ்த்தினார்.
வியந்து பார்க்கக் கூடிய வகையில் கேப்ரியல் மெதினா செய்த சாகசத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான ஏஎஃபியின் புகைப்பட கலைஞர் ஜெரோம் ப்ரூலெட் (Jerome Brouillet) படம் பிடித்தார். காண்பதற்கே வியப்பூட்டும் வகையில் புகைப்படம் அமைந்து இருந்தது. கற்பனைக்கு அப்பாற்றப்பட்டது போல் அவர் எடுத்த புகைப்படம் இருந்தது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வைரலாக பரவி வருகிறது. மெல்ல பறந்து செல்ல வா என்று நெட்டிசன்கள் பலரும் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும், புகைப்பட கலைஞர் கெரோம் ப்ருலெட்டிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் இந்த புகைப்படத்தை அவ்வளவு எளிதாக அவர் எடுத்துவிடவில்லை எனக் கூறப்படுகிறது. அலை சறுக்கில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகள் படகில் இருந்தவாறே அவர் படம் பிடித்துள்ளார். படகு குலுங்குதல் உள்ளிட்ட பல்வேறு தடங்கல்கள் இடையூறுகளுக்கு மத்தியிலும் ஒரு நொடிக்காக காத்திருந்து அவர் படம் பிடித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்! துப்பாக்கிச் சுடுதல் ஸ்வப்னில் குசலே வெண்கலம்! - Paris Olympics 2024