திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நேற்று பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதில், 35 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10ஆம் நாளான நேற்று (டிச.13) காலை 4 மணிக்கு ஏகன் அனேகனாகவும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அண்ணாமலையார் கோயிலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
![தேனியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-12-2024/23112063_d4.png)
அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் விநாயகர், முருகன், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அண்ணாமலையார் சன்னதி அருகில் உள்ள கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர், சரியாக 5:59 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்ந்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோயிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் பருவத ராஜகுலத்தினர் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சரியாக மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
![கோயில் உள்ள பக்தர்கள் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-12-2024/23112063_d.png)
சுமார் 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது 5 அடி உயரம் கொண்ட கொப்பரையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 4,500 கிலோ நெய் நிரப்பப்பட்டு, 2,500 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப தரிசனத்தை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிமீ தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தனர்.
![அண்ணாமலையார் எழுந்தருளிய காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-12-2024/23112063_d1.png)
தற்போது ஏற்றப்பட்டுள்ள மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எறியும். 11 நாட்களுக்கு பிறகு மலை மீது இருந்து கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு இறக்கப்பட்டு, கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயாரிக்கப்படும்.
இதையும் படிங்க: "அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்!
அது, ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத் திருவிழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
![திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-12-2024/23112063_d2.png)
அதேபோல, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் மலை மேல் அமைந்துள்ளது. திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலையை சுற்றி கிரிவலப்பாதையுடன் அமைந்துள்ளதால் இக்கோயிலானது மிகவும் பிரசித்தி பெற்றது.
மகா கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இங்கு நேற்று கிராம மக்கள் சார்பாக பாலா தீபம் மற்றும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்சியும், கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சாரல் மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வந்து கார்த்திகை தீபத்தை வணங்கி கைலாசநாதரை வழிபாடு செய்தார்.