மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தலைநகர் மெல்போர்ன் அடுத்த பப்புவா நியூ கினியாவில் இருந்து நீண்ட மைல் தூரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. இங்கு உள்ளூர் மக்களிடையே அங்குள்ள நிலம் மற்றும் ஏரி உரிமை தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஜூலை 16ஆம் தேதி வன்முறை வெடித்துள்ளது.
அப்போது, கிராமத்தில் உள்ள குடிசைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. அதை விட கொடுமையாக, கிராமங்களில் இருந்த 16 குழந்தைகள், பெண்கள் உட்பட 26 பேர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மெல்போர்ன் காவல்துறை அதிகாரி ஜேம்ஸ் பாகன் கூறுகையில், இந்த சம்பவத்தை 30 இளைஞர்களைக் கொண்ட குழு நடத்தியுள்ளனர் என்றும், இது மிகவும் பயங்கரமான நிகழ்வு எனவும் தெரிவித்தார்.
மேலும், ''கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் உயிர் தப்பிய கிராமவாசிகள் ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அந்த நள்ளிரவில், தலைகள் துண்டிக்கப்பட்ட உடல்களை பார்த்தோம். அதில் சில உடல்களை முதலைகள் இழுத்துச் சென்றன. கொலை நடந்த இடத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்'' என்றார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தாக்குதல்கள் கடந்த ஜூலை 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்துள்ளது. நிலம் மற்றும் ஏரியை உரிமைகோருவது தொடர்பான பிரச்சினையின் விளைவாக இந்த வன்முறை வெடித்து கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''இந்த சம்பவத்தில் 16 குழந்தைகள் உட்பட 26 பேர் இறந்திருக்கலாம். மேலும், பலர் காணாமல் போயுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 50க்கு மேல் உயரக்கூடும். 200க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதால் வெளியேறியுள்ளனர்” என்று வோல்கர் டர்க் கூறினார்.
இதையும் படிங்க: பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்! பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பதற்றமா?