கோயம்புத்தூர்: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "இந்நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இங்கு இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும். 3 முதல் 4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், 35 பாடல்கள் இடம் பெறும்.
மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொன்னாலும் பாடுவேன். பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும். உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும் என்றால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும். அது மட்டுமின்றி தமிழர்கள் சினிமா, இசை என்றாலே அதிகம் நேசிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன். அதை மட்டுமே பாட உள்ளேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத் தான் பாட உள்ளேன். முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்து விட்டது என்றால், தற்பொழுது எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல்கள் ஆகிவிட்டன.
முன்பெல்லாம் இலையில் பலகாரங்கள் அனைத்தும் வைத்து இருப்போம். தற்பொழுது பர்கர் போல் மாறிவிட்டது. வல்கரான பாடல்கள் தற்பொழுது அதிகரித்து வருவது என்பது, அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் தனது இசையில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன" என்று கார்த்திக் ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நடிகர் விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்" - KPY பாலா திட்டவட்டம்! - kpy bala not join politics